சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகா பெரியவாளை தரிசனம் செய்யப்போகும் முன் கொஞ்சம் பழங்களை வாங்கிக் கொண்டு போய்,அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ஒரு தம்பதியினர், பழக்கடைக்குப் போய், பழங்களை வாங்கினார்,கணவர். வாழைப் பழங்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்தார். மனைவிக்கு கோபம் வந்தது. “என்ன நீங்கள் பழங்களை இப்படி தேடித் தேடி எடுக்கிறீர்கள். பெரியவா இதை சாப்பிடவா போகிறார்?” என்று எரிந்து விழுந்தார். கணவர் அதைப் பொருட்- படுத்தாமல், நல்ல கனிந்த வாழைப்பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது மகான் கர்நூலில் முகாமிட்டு இருந்தார். தம்பதியினர் தங்களது குழந்தையோடு மகானைத் தரிசித்து விட்டு, கொண்டு வந்திருந்த பழத்தட்டை அவர் முன் வைத்தனர். தட்டை தன் அருகே கொண்டு வரும்படி அடியார்களிடம் சொல்ல, அவர்களும் தம்பதியினர் கொடுத்த தட்டை பெரியவா முன் நகர்த்தி வைத்தனர்.அடுத்தபடியாக மகான் செய்த காரியம், எல்லோரையும் வாயடைக்கச் செய்தது. வாழைப்பழங்களில் ஒன்றை எடுத்து உரித்தார். தான் பாதி சாப்பிட்ட பீன்னர்,மீதமிருந்ததை எதிரில் இருந்த பெண்ணிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். “பார்த்துப் பார்த்துப் பொறுக்குகிறீர்களே…..இதை பெரியவாளா சாப்பிடப் போகிறார்?” என்று கேட்ட பெண் அவர் தானே? அவர் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டதோடு அப்பெண்ணுக்கும் கொடுத்தார். குழந்தையின் கையிலும் பெரியவா ஒரு வாழைப் பழத்தைக் கொடுத்தார். அப்பெண்ணின் கண்களில் நீர் பெருக, மகானின் திருவடிமுன் விழுந்து வணங்கினார். கணவரிடம், பழவிஷயமாக தான் சொன்னது எவ்வளவு தவறான வார்த்தைகள்? அது மகானுக்குத் தெரியப் போவதில்லை என்று நினைத்தது மடத்தனமல்லவா? சர்வ வியாபியான அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?

