காஞ்சி மாமுனி திருவடி போற்றி

Published:

அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே 
அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே….

அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நம்மை தேடுவாரென்று தெரிந்து பேரிச்சம்பழக்காரனுடன் வந்திருக்குமோ ?
ஸ்ரீ கும்பகோணத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த காலம், ஸ்ரீ மஹா பெரியவா பிரம்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிறைய வித்வான்களும் சன்யாசிகளும் கேட்டு பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு வித்வான் இடையில் ஒரு சந்தேகம் கேட்டார். ஸ்ரீ மஹா பெரியவா அதற்கான பதிலை சுமார் ஐந்து நிமிடங்கள் சுருக்கமாக விவரித்தார். பின் தான் சொன்னதற்கு ஆதாரமாக காண்பிக்க சில நூல்களின் பெயர்களை சொன்னார்.

” பாமதி என்ற புத்தகத்திலோ ‘ பரிமள” த்திலோ இதற்கு விஸ்தாரமான பதில் இருக்கு. அதைப் படிச்சா போதும்……. மடத்து லைப்ரரியிலே அந்த புஸ்தகம் இருக்குமே பார்த்துடலாமே ” என்றார்.

புத்தகசாலைக்கு பொறுப்பாளர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் உடனே ” அந்த புஸ்தகத்தை யாரோ எடுத்துண்டு போயிருக்கா …. இப்போ லைப்ரரியிலே இல்லே ” என்றார்.

அப்போது தெருவில் ஒரு பேரிச்சம்பழம் விற்பவன் குரல் கொடுத்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான். அவன் பழைய புத்தகங்களுக்கு பேரிச்சம்பழம் கொடுப்பவன்.

” பழைய புஸ்தகங்களை போட்டுட்டு சிலபேர் பேரிச்சம்பழம் வாங்கியிருப்பா ” என்று ஸ்ரீ பெரியவா அப்போது கூறினார். ஏதோ அவன் பிழைப்பைப்பற்றி கூறுகிறார் என்று நினைத்த பண்டிதர்களுக்கு ஸ்ரீ மஹா பெரியவா அந்த பேரிச்சப்பழம், காரன்கிட்டே அவன் வெச்சிண்டு இருக்கின்ற புஸ்தகத்தையெல்லாம் விலை பேசி வாங்கிண்டு வா ” என்று தொண்டரிடம் கூறியபோது வேடிக்கை செய்கிறாரோ என்றிருந்தது.

எதற்கு இப்படி ஒரு கட்டளையை பிறக்கிறார் என்று புரியாது நின்றனர். மடத்து சிப்பந்தி போய் அத்தனை புத்தகங்களையும் ஒரு கட்டாய் வாங்கிவந்தார்.

முதல் அதிசயமாக அவை அனைத்தும் தமிழோ ஆங்கில புத்தகங்களோ அல்ல ! எல்லாம் சமஸ்கிரத புத்தகங்கள் அத்தனையும் பக்கங்கள் பழுப்படைந்து மிக பழயபுத்தகங்கள் அபூர்வமான புத்தகங்கள்.

” என்னென்ன புத்தகங்கள் இருக்குன்னு பாருங்க” என்றார். ஸ்ரீ மஹா பெரியவா ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பெயரை படித்துக்கொண்டே வந்தனர். இரண்டாவது பேரதிசயமாக அந்த புத்தககட்டின் நடுவே ஸ்ரீ பெரியவா கேட்ட ‘ பாமதி ‘ யும் ‘ பரிமள ‘ மும் இருந்தன. அந்த அத்வைத விளக்க நூல்கள், அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நம்மை தேடுவாரென்று தெரிந்து பேரிச்சம்பழக்காரனுடன் வந்திருக்குமோ ?

பதில் கிடைக்காத இது போன்ற அபூர்வமான அதிசயங்களில் லேசாக தன்னை தெய்வமென்று காட்டியருளிய கருணை தெய்வம், ஸ்ரீ மஹா பெரியவா தன்னை சரண்புகுந்தோரை என்றென்றும் கைவிடாமல் காப்பாற்றி சகல ஐஸ்வர்யங்களோடும் சர்வ மங்களங்களோடும் இன்பமாக வாழவைக்கும் என்பது சத்தியம் !

அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே 
அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே….

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!

 

எழுத்தாக்கம்: கி.பாலசுப்பிரமணியன்

Related articles

Recent articles

spot_img