கோவையில் மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டவுன்ஹால் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் மரம் நபர் டயரை எரித்து கோவிலுக்குள் வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரையில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த உக்கடம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறை விசாரணையில் தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலும் இதே போல ரயில்நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
நல்லாம்பாளையத்திலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் உள்ள பழைய துணிகள் மற்றும் பழைய பொருட்களை மர்ம நபர்கள் எரித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தராபுரத்தில் நேற்று பெரியார் சிலைக்கு காவி கலர் பூசப்பட்டதை அடுத்து , திருக்கோவிலூர் கீழையூரிலுள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து சுந்தராபுரம் பகுதியிலுள்ள பெரியார் சிலைக்கு காவி பூசிய பாரத் சேனா அமைப்பின் தெற்கு மண்டல அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து , கோவையில் இன்றைக்கு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காவல் துறையின் தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்தால் மட்டுமே கோவையில் கலவரம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பாக அமையும்.