திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று…

Published:

thiruppavai pasuram 8 - 2026

திருப்பாவை – பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம்: இயற்கை நிமித்தங்களைச் சொல்லி, தோழியைத் துயில் கலைந்து எழுமாறு ஏழாம் பாசுரத்தில் கூறிய ஆண்டாள், எட்டாம் பாசுரத்தில் “நம் குறைகளை ஆராய்ந்து நமக்கு இரங்குவான் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டும் எழு” என்று துயிலெழுப்புகிறார்.

கதிரவன் ஒளி பரப்ப எழுந்தான். கிழக்குத் திசையில் வானம் வெளுத்தது. எருமைகள் பனிப்புல்லை மேய்வதற்காக சிறு தோட்டங்களில் புகுந்தன. திருவேங்கடத்துக்கு யாத்திரை செல்பவரைப் போல், யாத்திரையாகப் போவதை பேறு எனக் கருதிப் போகின்ற மற்றுமுள்ள எல்லாப் பெண்பிள்ளைகளையும் போகவிடாமல் தடுத்து, உன்னை எழுப்பி அழைப்பதற்காகவே உன் மாளிகை வாசலில் நிறுத்தி வைத்திருக்கின்றோம்.

கண்ணனாலே மிகவும் விரும்பத் தக்க, ஒரு பதுமையைப் போன்றவளே! எங்களுடன் வருவதற்காக நீ எழுந்திரு. கண்ணனின் குணங்களைப் பாடி, அவனிடம் இருந்து நாம் விரும்பும் பறையைப் பெற வேண்டும். குதிரை உருவம் எடுத்து வந்த கேசி என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன் கண்ணன்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

வலிமையிற் பெரிய மல்லர்களை மாளச் செய்தவன் அவன். அந்த தேவாதி தேவனை நாம் அணுகி, அவன் அடி பணிந்தால், நம் குறைகளை ஆராய்ந்து, ஐயோ என்று இரங்கி நமக்கு அருள் புரிவான் என்று கூறி தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.

  • செங்கோட்டை ஶ்ரீராம்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img