ஆக.23 வெள்ளி அன்று மாலை ஜெர்மனியில் உள்ள யூச்சின் நகரில் உள்ள ஶ்ரீ நவசக்தி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆக.23 அன்று ஸ்ரீநவசக்தி ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி உத்ஸவத்தில் கிருஷ்ணருக்கு 108 சங்குகளினால் விசேஷ அபிஷேகம், அதனை தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம் பூஜைகளும் இடம்பெற்றன.
பின்னர் பெருமான் வீதி உலா வந்து, அன்பர்களுக்கு அருள் பாலித்தார். மேலும், கோகுலாஷ்டமி சிறப்புக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இளம் சிறார்களும் குழந்தைகளும் ஆலயத்திற்கு வருகை தந்து கோகுலத்து கண்ணனின் லீலைகளை நடத்தின் காட்டினர். தயிர்ப் பானைகள் கட்டப்பட்டு, உறியடி நிகழ்வை செய்து காட்டி, ஆர்வத்துடன் அதில் கலந்து கொண்டு விளையாடினர். அதன் மூலம் கண்ணனின் கோகுலத்து லீலைகள் குறித்து அறிந்து ஆனந்தம் அடைந்தனர்.
இது குறித்து ஆலயத்துக்கு வந்தவர்கள் குறிப்பிட்ட போது…
மதுரா நகரில் தேவகி – வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். கிருஷ்ணர் பிறந்தது சிறைச்சாலையில்.
சிறைச்சாலையில் பிறந்த கிருஷ்ணர், கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்க்கப்பட்டார். தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று, தன் தாய் தந்தையரை சிறையில் இருந்து விடுவித்து வெளியில் கொண்டு வந்து, நல்லவர்களைக் காத்து, அவர்களுக்காகவே துவாரகையில் அரண்மனை அமைத்து அரசாட்சி செய்தார்.
பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான்.
தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். அந்தக் கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது.
தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் வைகுண்டம் சென்றார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா” ”முகுந்தா” என்று பல பெயர்களில் அழைக்கிறோம். கண்ணைப் போல காப்பவன் என்றும், முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து, முக்தி அளிப்பவன் என்றும் நம்புகிறோம்… என்று குறிப்பிட்டனர்.
நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்.