கொழும்பு :
இலங்கையில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதனை இலங்கை தேசிய பேரிடர் மீட்புக் குழு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகளுக்கு சர்வதேச உதவியை இலங்கை கோரியுள்ளது. 2003க்குப் பின்னர் மிக மோசமான வெள்ள நிலையில் இலங்கை தவித்து வருகிறது.
வெள்ளத்துக்கு 90 பேர் உயிரிழந்ததாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பலி 122 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 97க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இலங்கையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கீலனி ஆற்றையொட்டி வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை தேசிய பேரிடர் மீட்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும், தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய தரப்பில் கொச்சி கடற்படைத் தளத்தில் இருந்து உடனடியாக 3 கப்பல்கள் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு விரைந்தன. சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்த கப்பலில், உணவு, மருந்துகள், நிவாரணப் பொருள்கள் ஆகியவை வந்தன. உடன் மருத்துவர்கள் குழுவும் வந்திறங்கியது.