சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற முழு அமர்வில், 8 நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தின் விளைவாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு ஆப்கானிஸ்தான் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி துணிச்சலான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிய அவர், அருகில் உள்ள நாடுகள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 6 சதவீதம் மட்டுமே என்றும், கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதை இருமடங்காக உயர்த்த முடியும் என்றும் மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் பவுத்த மதத் திருவிழாவுக்கும், சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனும், சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடனும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.



