பாரதிராஜா இயக்கத்தில், குற்றப்பரம்பரை கதை வெப் சீரிஸாக உருவாக இருக்கிறது.
தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில இன மக்களை, குற்றப்பரம்பரையினர் என அப்போதைய பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியது. இந்த சட்டத்துக்குள் 90 சாதியினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் மீது ரேகை சட்டம் திணிக்கப்பட்டது.
இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கடும் போராட்டம் வெடித்தது. இதற்காக, 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டத்தின் போது, அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த சட்டம் 1947 ஆம் ஆண்டு முழுமையாக நீக்கப்பட்டது.
இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து குற்றப்பரம்பரை கதையை, எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதினார். அதை இயக்குனர் பாலா படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார். இதற்கான வேலைகள் தொடங்கின.
இதையடுத்து இயக்குனர் பாரதிராஜா, அது தனது கனவு படம் என்றும் அந்தக் கதையை தான் தான் படமாக்குவேன் என்று அறிவித்தார். ரத்னகுமார் எழுதிய கதையின் அடிப்படையில் இவர் படமாக்க இருந்தார். அடுத்த சில நாட்களிலேயே அவசரம் அவசரமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கான பூஜை போடப்பட்டது. ஆனால், பின்னர் படம் தொடங்கப் படவில்லை.
இந்நிலையில் குற்றப் பரம்பரை படத்தை வெப் சீரிஸாக எடுக்க முடிவு செய்துள்ளனர். பாரதிராஜா இயக்கி நடிக்கிறார். தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, இப்போதுதான் பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகி உள்ளன. விரைவில் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தேர்வு தொடங்கும் என்றார்.
ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்று, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாகக் கொண்டு வெப் தொடரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இவர்களும் தயாரிக்க உள்ளனர்.
பாரதிராஜாவால் தொடங்கப்பட்ட குற்றப்பரம்பரை படம் உருவாகாது எனக் கூறப்படுகிறது.