மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பின், மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.
இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு அசுரன் மூலம் நிறைவேறியது. இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார் மஞ்சு வாரியர்.
‘தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அசுரனில் கிடைத்ததை போல, சிறந்த கேரக்டர்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்’ என்று கூறியிருந்தார் மஞ்சு வாரியர்.
இதற்கிடையே அவர் மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். மம்மூட்டியுடன் அவர் நடிப்பது இதுவே முதன்முறை. அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோ இயக்கும் இந்தப் படத்தை அன்டோ ஜோசப், உன்னிகிருஷ்ணன் தயாரிக்கின்றனர்.
மம்மூட்டியுடன் முதன்முறையாக நடிப்பது பற்றி நடிகை மஞ்சு வாரியர் கூறும்போது, இது எனது நீண்ட நாள் ஆசை. இதுவரை அதற்கான வாய்ப்பு வரவில்லை. இப்போது கிடைத்திருக்கிறது. உற்சாகமாக இருக்கிறேன். இந்த புத்தாண்டு, என் கனவை நனவாக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.