பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சோலியை முடித்து விடுங்கள் என்று இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் பேசிய நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன.13 வரை நீதிமன்ற காவல் விதிக்கப் பட்டுள்ளது.
வருகிற 13ஆம் தேதி வரை நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி.
போலீஸார் நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், உடல் நலக் குறைவு என்ற காரணம் கூறி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுவதற்காக அவர் அழைத்துச் செல்லப் பட்டார். தொடர்ந்து பெரம்பலூரில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப் பட்டு, இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக, நெல்லைக்கு அழைத்து வந்த போலீஸார், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். பின்னர், நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நெல்லை கண்ணன் ஆஜர்படுத்தப் பட்டார். விசாரணைக்கு பின் அவரை ஜன.13 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப் பட்டிருந்த நிலையில், தற்போது ஜாமின் கிடைக்காமல் இருப்பதற்கான 153 ஏ, 506 1 ஆகிய பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.