514 ஆண்டுகள் தடையின்றி மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேர் அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
மிகவும் பாரம்பரியமான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.
தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்று, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில்! இக்கோயிலின் ஆனித் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது,
நெல்லையப்பர் கோயில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருத்தலம். இக்கோயிலில் ஆனித் தேர்த் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அன்பர்களுக்கு திருக்காட்சி அளித்தனர்.
ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை இன்று காலை 8.30 மணி அளவில் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக நெல்லை மாவட்ட ஆட்சியரும் இதில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தார்.
நெல்லையப்பர் திருவீதி உலா வரும் நான்கு ரத வீதிகளிலும் வண்ணக் கோலங்களால் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
நெல்லையப்பர் கோயிலின் திருத்தேர், தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரும் தேர். சுமார் 450 டன் எடையில் முற்றிலும் மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படும் பெருமை பெற்றது. சுமார் 515 ஆண்டுகளாக தங்கு தடையின்றி நடைபெறும் உலகின் மிகப் பழைமையான தேரோட்டம் நெல்லையில் நடைபெறும் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்தான்! கடந்த 1505ஆம் ஆண்டு முதல் நெல்லையப்பரின் தேரோட்டம் இடைவிடாமல் நடந்து வருவது வரலாற்றுச் சான்றுகளால் விளங்கும்!