பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க சரியான யோசனை!

Published:

satyapalmalik - 2026

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க சரியான யோசனையை முன்வைத்துள்ளார் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக். அதற்கு அவர் கூறிய வழிமுறை போர் அல்ல, பாகிஸ்தான் கையாண்டு வரும் பயங்கரவாத வழிமுறையும் அல்ல, பாரதத்தின் பாரம்பரிய அஹிம்சை வழிமுறைதான்!

காஷ்மீரில் ஏற்படும் வளர்ச்சியை பார்த்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் தாங்களும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று புரட்சியில் ஈடுபடுவார்கள் என சத்யபால் மாலிக் கூறியுள்ளது வரவேற்கப் படக் கூடிய ஒன்றுதான்!

நேற்று ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் ஆளுநர் சத்யபால் மாலிக். அப்போது அவர், கடந்த 10, 15 தினங்களாக நமது அமைச்சர்கள் சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசாமல், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து பேசி வருகின்றனர். எனவே நமது அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் என்பது தெளிவாகியிருக்கிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரப் பகுதியை நாம் மீட்க வேண்டும் என்றால், அதனை நாம் நமது காஷ்மீர் பகுதியில் மேற்கொள்ளப் படும் வளர்ச்சிப் பணிகள் மூலமே சாத்தியமாக்கலாம்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுடன் நாம் அன்பை செலுத்தி, அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படி நடக்கும் போது, அடுத்த ஓராண்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிச்சயம் மக்கள் புரட்சி வெடிக்கும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டால், எந்தவித பிரச்னையும் இன்றி ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் வசம் வரும். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் இந்தியாவுடன் இணைந்து தாங்களும் வளர்ச்சி பெற முன் வருவார்கள். இதுதான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்கான ஒரே வழியாக இருக்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார் சத்யபால் மாலிக்.

மேலும் காஷ்மீரத்து மக்களும் மற்ற இந்தியப் பகுதியில் உள்ள மக்களும் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் செலுத்தி பழக வேண்டும். நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரத்து மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு உதவ அனைத்து மாநிலங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று தனது கருத்தைக் கூறியுள்ளார் சத்யபால் மாலிக்.

காஷ்மீரத்தில் அமைதி திரும்பக் கூடாது என்பதில் மட்டுமே குறியாக செயல்பட்டு வருகின்றது பாகிஸ்தான். காஷ்மீரத்து மக்கள் அமைதியுடன் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரிலும் எதிரொலிக்கும் என்பது பாகிஸ்தானும், அதன் பயங்கரவாதிகளும் அறியாததல்ல.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

அதனால்தான் காஷ்மீரத்துத் தெருக்களின் சுவர்களில் பயங்கரவாதிகள், மிரட்டல் போஸ்டர்களை ஒட்டிச் செல்கின்றனர். கடைகளைத் திறக்கக் கூடாது, மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லக் கூடாது, அலுவலகங்களுக்கு போகக் கூடாது, வங்கிகள் இயங்கக் கூடாது என்று மிரட்டல்களை ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்து வருகின்றனர்.

இதனை முறியடித்து, மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க ராணுவம் தங்கள் முழு முயற்சியை செய்து வருகிறது. கடந்த வாரம் லாரியில் ஆப்பிள் ஏற்றி அனுப்பிய காஷ்மீர வியாபாரியை மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர் பயங்கரவாதிகள். அதனால் அரசே ஆப்பிள் வர்த்தகத்தை மேற்கொண்டு நடத்த யோசனைகளை வெளியிட்டுள்ளது.

காஷ்மீரத்து அரசியல் வாதிகள் வீட்டுக் காவலில் வைத்திருப்பதும் கூட, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தி, மீண்டும் பொதுமக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதற்குத்தான் என்பது வெள்ளிடை மலை. சுற்றிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் துரத்தும் போது, அவர்களால் ஏற்படும் அசம்பாவிதங்களால், மேலும் மேலும் காஷ்மீரின் அமைதியின்மையும் கலவரமும் ஏற்படக் கூடாது என்றால், இன்னும் சில காலம் இந்தத் தலைவர்கள் வீட்டுச் சிறையிலேயே இருக்கட்டும்! அதற்கு பதிலாக, காஷ்மீர் அரசியல் தலைவகளுக்கு வக்காலத்து வாங்கி வாய் திறக்கும் இந்திய நாட்டின் மற்ற பகுதிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் யாராயிருந்தாலும் அவர்களும் அடக்கி வைக்கப் பட வேண்டியது அவசியம்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இதில் நீதிமன்றம் தேவையற்ற வகையில் தலையிட்டு, நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாமல், கள நிலவரம் அறியாமல் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்குமேயானால் அது நாட்டுக்கு விபரீதமாகவே முடியும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img