
— ராம் மாதவ் –
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த வார துவக்கத்தில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இந்திய அரசு இரங்கல் தெரிவிக்காததை விமர்சித்து கட்டுரை எழுதி உள்ளார் (3 மார்ச் – இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு). ‘நடு நிலைமையை கைவிட்டு விட்ட’தாகவும் ‘நமது அயலுறவு கொள்கை செல்லும் திசை, நம்பகத்தன்மை’ பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரான் மோதலை அந்த பிராந்தியத்தில் நிலவும் புவியரசியலுடன் விரிவான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது போன்ற நேரங்களில் நடுநிலை மட்டும் போதாது. நாம் எந்த பக்கசாய்வும் இல்லாதவர்கள் என்பது வெளிப்பட வேண்டும். இதைதான் அண்மையில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் – வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அதிரடி நடவடிக்கை மூலம் அமெரிக்கா பிடித்த போதும் , ஈரானின் உச்சபட்ச தலைவர் உட்பட எண்ணற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தாக்குதலின் போதும் – இந்திய அரசு கடைபிடித்தது. ‘ஆழ்ந்த கவலையை’ வெளிப்படுத்தியது, ‘பேச்சுவார்த்தை , ராஜதந்திர நடவடிக்கை’களை மேற்கொள்ள வேண்டும் என்றது. ‘அனைத்து தரப்பி’னரும் ‘நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மோதலை அதிகரிக்கக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று கூறியது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் அரசு மற்றும் மக்களிடையே நல்லுறவு நிலவுகிறது. அதே வேளையில், முறையான அரசு நடவடிக்கைகள், புவியரசியல் நிதர்சனங்கள், அது சார்ந்த நலன்கள் மற்றும் ஆதாயங்களை உணர்ச்சி கொத்தளிப்பில் பலியிட முடியாது. உலகத்திற்கு சற்றும் அறிமுகம் இல்லாத ஒரு ஆட்சி முறையை ஈரான் பின்பற்றுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் நிலவிய பன்னிருவர் ஷியா மரபை எந்த மாற்றமும் இல்லாமல் இறுக்கமாக பின்பற்றுகிறது. 12 வது இமாமாக இருந்த இமாம் மஹ்தி 869 ஆண்டில் கண்ணுக்கு புலப்படாத ‘அமானுஷ்ய மறைவு நிலை’யை அடைந்தார். அந்த நிலையிலிருந்து ஷியா பிரிவை வழி நடத்தி வருகிறார். இறைவன் இமாம் மஹ்தியை உயிருடன் வைத்திருப்பதாகவும் இறைவன் விரும்பும் போது இமாமை மீண்டும் தோன்ற செய்வார் என்ற நம்பிக்கை ஷியா பிரிவு முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது.
இமாம் திரும்பி வரும் வரையில் அந்த சமயப் பிரிவு வேலாயத் – இ- ஃ பகிஹ் – இஸ்லாமிய நீதி முறைமையை – பின்பற்ற வேண்டும். 1979 இல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு ஆயதுல்லா ரூஹோல்லா கொமெய்னி தன்னை வலி – இ – மகிஹ்வாக அறிவித்து கொண்டு மேல் சொன்ன இஸ்லாமிய அரசமைப்பை நடைமுறைப்படுத்தினார். அவருக்கு அடுத்து வந்த கமேனி (அண்மையில் கொல்லப்பட்டவர்) எல்லா அதிகாரமும் தன் கைவசம் கொண்டு வந்து உச்சபட்ச தலைவராக ஆனார்.
சோனியா காந்தியின் கட்டுரையில் கமேனியை ‘அரசின் தலைவர்’ என்று மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதும் உச்சபட்ச தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில்லை. ஆனால் ஈரானின் ஜனாதிபதிகள் மற்ற நாடுகளுக்கு விஜயம் செய்யும்போது அரசின் தலைவர் என்ற வகையில் அவர்களுக்கு அரசு முறையிலான மரியாதைகள் வழங்கப்படும். ஈரானிய ஜனாதிபதிகள் முகமது கதாமி 2003 லும் மம்முத் அஹமதிநெஜாத் 2008 லும் ஹாசன் ரூஹானி 2018 லும் இந்தியா வந்தபோது அரசின் தலைவர்கள் என்ற வகையில், அரசு முறைமைப்படி , உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். அந்த காரணத்தினால் தான் இந்தியா தனது அயலுறவுத்துறை செயலாளரை ஈரானிய தூதரகத்துக்கு அனுப்பி இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட செய்தது. அதன் மூலம் அந்த உச்சபட்ச தலைவரின் மரணத்திற்கு தனது கண்டனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.
சோனியா காந்தி கட்டுரையில் 1994 மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் விஷயமாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முன்வைத்தபோது ஈரான் அதை தடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசின் நிலைப்பாட்டையும் கமேனியின் நிலைப்பாட்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது . கடந்த பத்தாண்டுகளில் கமேனி காஷ்மீர் விஷயமாகவும் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றியும் இந்திய அரசின் செயல்பாட்டையும் பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2019 இல் ஜம்மு-காஷ்மீரில் இருந்த 370 சட்டப்பிரிவை நீக்கியபோது கமேனி டிவிட்டரில் , ‘காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் நிலை எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு நியாயமான கொள்கையை பின்பற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்களும் அடக்குமுறையும் நிகழாமல் தடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்’ என்று பதிவிட்டார்.
2020 ல் சி ஏ ஏ ( குடியுரிமை சட்ட திருத்தம் ) தொடர்பாக தில்லியில் எதிர்ப்பு எழுந்த போது கமேனி மீண்டும் ட்விட்டர் மூலம் இந்தியா முஸ்லிம்களை ‘திரள்படுகொலை’ செய்வதாக குற்றம் சாட்டினார். ‘உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் இந்தியாவில் முஸ்லிம்கள் திரளப்படுகொலை செய்யப்படுவதை கண்டு துயரத்தில் ஆழந்துள்ளன. [இந்திய அரசு] முஸ்லிம்களை திரள்படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்’ என்றார் . ‘தீவிரவாத ஹிந்துக்களையும் அவர்களது கட்சிகளையும் இந்திய அரசு எதிர்க்க வேண்டும் . முஸ்லிம்கள் திரள்படுகொலையை தடுக்க வேண்டும்’ என்று அவர் பதிவிட்டார்.
2024 ல் கமேனி இந்தியாவை காசா, மியான்மருடன் ஒப்பிட்டு, ‘மியான்மர், காசா , இந்தியாவில் முஸ்லிம்கள் துன்பப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் நாம் நம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ள அருகதை அற்றவர்கள் ஆவோம்’ என்று மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அவரது மேற்கண்ட கூற்றுக்களை இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் ‘தவறான புரிதலால்’ சொல்லப்படுகின்றன என்றும் ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியது. அவரது கூற்றை உறுதியாக மறுத்த அயலுறவு அமைச்சகம், ‘சிறுபான்மையினரை பற்றி விமர்சிக்கும் நாடுகள் தங்கள் நாட்டில் சிறுபான்மையினரை எப்படி நடத்துகின்றன என்பதை முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிலடி கொடுத்தது.
2015 ல் சவுதி அரேபியாவில் ‘இனப்படுகொலை’ நடப்பதாக கமேனி குற்றம் சாட்டிய போது சவுதி அரேபியா அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியது. அதேபோல் அவர் மீண்டும் மீண்டும் ‘அமெரிக்கா அழியட்டும்’ , ‘ இஸ்ரேல் சாகட்டும்’ என்று வெறுப்பை வெளிப்படுத்திய போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இது போன்ற பேச்சால் பலருக்கும் அவரை பிடிக்காமல் போனது. இறுதியில் அவரது மரணத்திற்கு ஜி 7 நாடுகளும் பல இஸ்லாமிய நாடுகளும் இன்னும் பிற நாடுகளும் இரங்கல் தெரிவிக்காதது சோகமானது.
மேற்சொன்னதை எல்லாம் மீறி இந்திய அரசு ஈரானிய அரசுடன் நல்லுறவை வளர்த்து வந்தது. ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி 2024 இல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தபோது இந்தியா ஒரு நாள் துக்கம் அனுஷ்டித்தது. பிரதமர் மோடி , செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாகவும் ‘இந்த சோதனையான காலத்தில் இந்தியா ஈரானுக்கு துணை நிற்கும்’ என்றும் தனது இரங்கல் செய்திகள் குறிப்பிட்டிருந்தார்.
சோனியா காந்தி ‘நம்முடைய மரபை’ கைவிட்டதாக இந்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது முற்றிலும் தவறானது. வருகின்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு காங்கிரசின் பாரம்பரிய சிறுபான்மையினர் கொள்கையை அந்த கட்டுரையில் எதிரொலித்ததாகவே கருத வேண்டியுள்ளது.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
கட்டுரையாளர் இந்தியா பவுண்டேசனின் தலைவர். பாஜகவில் இருக்கிறார்.



