‘பொது நலனுக்கு எதிராக கருத்து பரப்புபவர் குறித்து விசாரிப்பதுடன், அவர்களது பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சற்றே தாமதமான உத்தரவு என்றாலும் இப்போதாவது இப்படி ஒரு உத்தரவை உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறதே என்று பெருமூச்சு விடுகிறார்கள் பலர்.
காரணம், கடந்த ஆறு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராகவே, குறிப்பாக மோடி பிரதமர் ஆன பின்னர் அவருக்கு எதிராக மட்டுமே தீட்டப்பட்டுள்ள கூர் அம்புகளாகவே இத்தகைய போராளிப் பட்டம் சுமப்பவர்களை நாடு பார்த்து வந்திருக்கிறது.
2014ல் மத்தியில் மோடி பிரதமர் ஆகப் போட்டியிடுகிறார் என்று தெரிந்த போது, தேர்தல் நேரத்திலேயே அவருக்கு எதிரான பிரசாரங்களைக் கையிலெடுத்தனர் சிலர். அந்த நிலை தேர்தலுக்குப் பின்னும் தொடர்ந்தது. அதன் பின்னர் மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள், பொருளாதார ரீதியாக ஊழல்களைக் குறைத்து, வெளிப்படையான நிர்வாகம், மற்றும் நிதி விவகாரங்களில் வெளிப்படைத் தன்மையைக் காட்டியது ஆகியவை மோடியின் மீது மேலும் மேலும் சிலருக்கு குறிப்பாக சில அமைப்புகளுக்கு வன்மம் வளரக் காரணமானது.
இத்தகைய சூழலில்தான், அமைப்புகள் தாங்களாக வெளியில் வராமல், தனிநபர்களின் பின்னணியில் இயக்க ரீதியாக ஒருங்கிணைக்கப் பட்டு வெளியில் வந்தன. மே 17 இயக்கம் என்பதும், விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுப் போர்வையில், 2009 ஆம் ஆண்டு, இலங்கையின் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவாக அமைப்பு ரீதியாக தமிழர்களை ஒருங்கிணைப்பதாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்பு பாதிரியின் மூலம், திருமுருகன் காந்தி என்ற முகமூடியை வைத்து தமிழகத்தில் திணிக்கப் பட்டது.
அதன் பின்னர் அந்த அமைப்பு கடந்து வந்த பாதையைப் பார்த்தால், இன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஏன் இவ்வாறு கூறினார் என்ற சூட்சுமம் நமக்குப் புரிந்துவிடும். ஆனால், இதனை இத்தனை நாட்களாக சத்தம் போட்டுக் கூறிக் கொண்டிருந்த நாட்டுப் பற்றாளர்களின் கூக்குரல் காற்றில் கரைந்து போனதுதான் மிச்சம். அன்றே இந்தக் கூக்குரல்களை அபயக் குரலாகக் கருதி நீதிமன்றம் செவிமடுத்திருக்குமானால், திருமுருகன் காந்தி குறித்து தற்போது நீதிமன்றம் கூறியிருக்கும் வார்த்தைகளை வெளிப்படுத்தும் சூழல் வந்திருக்காதுதான்!
இப்போதுதான் விழித்துக் கொண்டு ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது நீதிமன்றம்! ‘கருத்து சுதந்திரத்தை கவனமாக கையாள வேண்டும்’ என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பைத் துாண்டும் கருத்தை வெளியிட அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதை தலைவர்களும் பேச்சாளர்களும் மனதில் கொள்ள வேண்டும்’ – என்று கூறியது நீதிமன்றம்!
‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசிய பேச்சுக்காக எட்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்தப் பேச்சுக்கள் எல்லாம் சமூகத்தினரிடையே வெறுப்புணர்வைத் துாண்டும் விதத்தில் உள்ளன என்று புகார்கள் கூறப் பட்டன. இதை அடுத்து, இந்த 8 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுக்களில் தாம் பொதுப் பிரச்னைகள் குறித்தே பேசியதாகவும், மக்கள் நலன்களுக்கு எதிரான அரசின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதற்காகவே தன் மீது பொய் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தி.
ஆனால், அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட போது, ”அரசின் திட்டங்கள் கொள்கைகள் குறித்து மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களைத் துாண்டும் வகையில் இவர் பேசியுள்ளார். மேலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே விரோதத்தை துாண்ட இவர் முயற்சி செய்கிறார்” என்று குறிப்பிட்டார்.
இதனை அடுத்து, திருமுருகன் காந்தியின் மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தரவில் குறிப்பிட்ட போது…
புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போது ‘மைக்கைப் பிடித்தாலே வசை மாரி அவதுாறுகளைப் பொழியும் எண்ணம் மனுதாரருக்கு இருப்பது தெரிகிறது.
ஜனநாயகத்தின் அடிப்படை, ‘சுதந்திரமான பேச்சு’ என்பது உண்மை தான்! சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, வெவ்வேறான கருத்துக்களை விவாதிப்பது… இவை எல்லாம் சுதந்திரமான சமூகத்துக்கு அடிப்படையானது தான். அதேநேரம், பேச்சு சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளை அரசியலமைப்பு சட்டம் விதித்துள்ளது.
நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொது அமைதி உள்ளிட்ட விஷயங்களில் பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பொது மேடை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பேசும் ஒரு தலைவரோ, பேச்சாளரோ பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பைத் துாண்டும் பேச்சை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
வெறுப்பைத் துாண்டும் பேச்சுக்கள், வெவ்வேறு இனம் மற்றும் மத சமூகத்தவர் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்திவிடும்.
மதம், இனம், பிறந்த இடம், மொழி, ஜாதி அடிப்படையில் ஒருவரை அவமரியாதையாக பேசும் பேச்சு, சட்டப்படி தண்டனைக்கு உரியது.
சுதந்திரமான பேச்சுக்கு இருக்கும் பொறுப்புணர்வை ஒருவர் மறந்து விடக்கூடாது. மனுதாரரின் பேச்சுக்களைப் பார்க்கும் போது குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் துாண்டும் விதத்தில் உள்ளது.
தமிழகம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்ற ரீதியில் காட்டுவதற்கு திரும்பத் திரும்ப முயற்சிக்கிறார் இவர்.
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
மாநில மக்களின் நலன்களைப் பாதுகாக்க அமைப்பு நடத்துவதாக மனுதாரர் கூறுகிறார். ஆனால், அவரது பேச்சுக்களைப் பார்த்தால் அமைப்பின் நோக்கப்படி இல்லை.
அவரது பேச்சுக்கள் வெவ்வேறு மதம் மற்றும் சமூகத்தினருக்கு இடையில் பகைமையை வெறுப்பை வளர்க்கும் விதத்தில் உள்ளது.
இத்தகைய பேச்சுக்கள் மாநிலத்தின் நலன்களுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்காது.
குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக விஷத்தை கக்குவது, அடித்தட்டு மக்கள் உயர்வதற்கு உதவியாக இருக்காது; மாறாக சமூகத்தினர் மத்தியில் வெறுப்பு விதைகளை விதைப்பதாகி விடும்.
முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் உயர்வையும் மக்கள் விரும்புகின்றனர். அதற்கு பங்களிக்கும் விதத்தில் மனுதாரரின் பேச்சு இல்லை.
எனவே, இந்த வழக்குகளில் போலீஸ் நடத்தும் விசாரணையில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. முழுமையான விசாரணையை நடத்தி மனுதாரர் மட்டுமே வெளியில் தெரியும் முகமா; அவரது பின்னணியில் பெரிய வலை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.. என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
இதனிடையே, தனது பின்னணி குறித்து நீதிபதி குறிப்பிட்டதால், அது குறித்து தமிழக அரசு விசாரித்து அறிய வசதியாக, தனக்குப் பின்னணியில் தன் மகள் மட்டுமே இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தி!
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளவை…
என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள்? அவளின் உலகம் களவாடப்படுவதை என்னைத் தவிர வேறு யார் தடுப்பார்கள்..??! – என்று, பிரச்னையின் தீவிரத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.
என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான். pic.twitter.com/pt6hD6Qk4G
— Thirumurugan Gandhi (@thiruja) July 10, 2019
மே 17 இயக்கத்தின் ஒருங்ணைப்பாளராக இருந்து கொண்டு, ஆண்டு தோறும் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது, காவிரிப் பிரச்னையைக் கையில் எடுத்து அவ்வப்போது போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோ கார்பன் விவகாரம், முகிலன் காணாமல் போன விவகாரம் என பல்வேறு போராட்டங்களை நடத்துவது… இதுதான் இவரது முழுநேரத் தொழில்!
இதற்காக மத்திய அரசையும் நாட்டின் பிரதமரையும் மிகக் கடுமையாக வாய்க்கு வந்த படி மட்டுமரியாதை இன்றி திட்டித் தீர்த்து வருகிறார். இதை அடுத்தே, இவரது நோக்கம் என்ன என்பதை நீதிமன்றம் மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டிருக்கிறது.
“திருமுருகன் காந்தி மீது காவல்துறை வழக்குத் தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. அவர்குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவரைப் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா என முழு விசாரணை நடத்த வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருமுருகன் காந்தியின் தொடக்க காலத்தில், மே 17 என்ற இயக்கத்தைத் தொடங்கிய போதும், பின்னாளிலும், உடன் இருந்தவர் உமர். 2011 முதல் 2014 வரை உறுப்பினராக இருந்த இவர், பின்னர் அதில் இருந்து விலகினார். அப்போது நான் ஏன் மே 17 இயக்கத்தின் உறுப்பினர் இல்லை … என்று விளக்கம் எழுதி வலைப்பூவில் பதிவிட்டார். இணையவெளியில் இப்போதும் அது படிக்கக் கிடைக்கிறது.
நான் ஏன் மே 17 இயக்கத்தின் உறுப்பினர் இல்லை என்று ஒரு கட்டுரையினை எழுதியிருக்கிறார் உமர். அதன் முழு வடிவம் இங்கே… https://drive.google.com/file/d/0B_V-itJ3ck-rODJfdlV6YXd5eDQ/view
இந்தக் கட்டுரையில், மே 17 இயக்கத்தின் தொடக்கம், உடன் இருந்தவர்கள், பின்னணி, நாம் தமிழர் சீமான், வைகோ இவர்களை சாடுவது, இன்னும் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
வெளித்தோற்றத்துக்கு எப்போது ஒரு புனைபெயரை வைத்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினார்களோ அப்போதே உள்நோக்கமும் பின்னணியும் ஆராயப் பட வேண்டியவைதான்! நீதிமன்றத்தின் வழிகாட்டலிலாவது, போலீஸார் இதைச் செய்யட்டும்!