குஜராத் மாநிலம் சூரத் நகரில் கட்டுமான வேலை செய்து வருபவர் ராஜேந்திர கௌசிக் விஸ்வர்கமா. இவருக்கு வயது 23 ஆகிறது.
சூரத்தின் வேசு கால்வாய் சாலையில் சங்கினி அரிஸே அப்பார்ண்ட்மெண்ட் என்ற 19 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் வேலை செய்து வந்தார்.
செவ்வாய்கிழமையான் இன்று காலை 6.50 மணிக்கு 13வது மாடிக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். மரப்பலகையில் அமைக்கப்பட்ட சாரத்தில் அமர்ந்து இந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுவதில் கவனமாக இருந்த ராஜேந்திர கௌசிக் தான் நின்று கொண்டிருக்கும் பலகை சட்டென உடைந்து நொறுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார்.
அவர் 13வது மாடியில் இருந்து விழும் போது பல மூங்கில் சாரங்கள் மீது விழுந்து விழுந்து தரைக்கு நேராக வந்து விழுந்ததால் அவருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது. அவர் உயிரிழக்கவில்லை. அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இடது கையில் சிறிய அளவில் எலும்பு முறிவு மட்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 13வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிர் பிழைத்த அதிசயம் சூரத் நகர் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.