50 க்கும் மேற்பட்ட இந்துக்கள் இணைந்து மனிதசங்கிலி அமைத்து, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் உ.பி., மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது.
கான்பூரின் பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (25). 12 வயதில் தந்தையை இழந்த இவருக்கு நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு, பிரதாப்கரை சேர்ந்த ஹஸ்னைன் பரூக்கி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் டிச.,21 ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று அதிகாலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஊரே உச்சகட்ட பதற்றத்தில் இருந்தது.
போலீஸ், துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருந்தது.நிலைமை மோசமாக இருந்த சமயத்தில் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் பெண் வீட்டார் பயத்தில் இருந்தனர்.
ஜீனத்தின் உறவினர் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்களிடம் ஆலோசித்து, ஏறக்குறைய திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டனர். அனைவரும் வழியின்றி தவித்துக் கொண்டிருந்த போது, இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது.
இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த விமல் சபாதியா என்பவர் தனது நண்பர்களான சோம்நாத் திவாரி மற்றும் நீரஜ் திவாரி ஆகியோரிடம் பேசி உள்ளார்.
மாப்பிள்ளை வீட்டாரிடமும் பேசி திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டாம் என கூறி உள்ளார்.”கவலைப்படாதீர்கள். நாங்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறோம்” என அவர்கள் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை அளித்தனர்.
சிறிது நேரத்தில் மினி பஸ் மற்றும் கார்களில் வந்த 70 இந்துக்கள் ஒன்றிணைந்து, மனிதசங்கிலி அமைத்து, பெண் வீட்டாரை பத்திரமாக திருமணம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்த ஜீனத், விமல் மற்றும் அவரது நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆசி பெற்று சென்றுள்ளார்.
பதற்றமான நிலையால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்ததால், திருமணம் நடக்காது என்ற நம்பிக்கை இழந்திருந்த தனக்கு திருமணத்தை கடவுளைப் போல் வந்து நடத்தி வைத்த சகோதர்களை மறக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜீனத்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ள நிலையில் விமல் மற்றும் அவரது நண்பர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.