தில்லி மாநாட்டில் கலந்து கொண்டதால் சுல்தான்புரியில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 60 வயது தமிழக முதியவர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த கிட்டத்தட்ட 762 பேர், தில்லியில் சமீபத்தில் எல்.ஜே.என்.பி, ஜி.டி.பி மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இருந்து வடமேற்கு தில்லியில் உள்ள சுல்தான்புரி மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் இங்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர், கடந்த மாதம் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டதால் அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர்.
அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்ததை அடுத்து டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஆனால், உயிரிழந்தவர் நீரிழிவு நோயாளி என்றும், அவருக்கு டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் கூறி அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பாக கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது, மேலும், உயிரிழந்த நபர் சர்க்கரை நோய் இருப்பதை பற்றி தெரிவிக்கவில்லை. கோவிட்-19 மையத்திற்கு அழைத்து வரப்படும் நோயாளிகளிடம் அவர்களது முந்தைய நோய் மற்றும் பயண விவரங்கள் அனைத்தும் பெறப்படுகிறது.
ஆனால், இறந்தவர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மருத்துவர்கள் கூறும்போது,’ இந்த விவகாரத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இறந்தவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை வந்தால் மட்டுமே அவர் எதனால் இறந்தார் என்பது தெரியவரும்’ என தெரிவித்தனர்.