தமிழக – ஆந்திர எல்லையில் பொன்னை என்ற இடத்தில் இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலையின் நடுவே பிளாக் கற்கள் கொண்டு பெரிய சுவரே கட்டி, சாலையை மறைத்துவிட்டார்கள். அதுவும் சில நாட்கள் ஊரடங்குக்காக! ஆனால் அதனால் வரும் நடைமுறை சிக்கல்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டதாகவே தெரியவில்லை. இன்று அதே சுவர் இடிக்கப் பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பிரச்னைகளை எதிர்கொண்டதை அடுத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலம் எல்லையில் கட்டப்பட்ட சுவர்கள் இடிக்கப்பட்டன. இரு மாநிலங்களுக்கிடையில் வாகனங்களின் நடமாட்டத்தை நிறுத்துவதற்காக ஆந்திராவின் எல்லைகளைத் தாண்டி தமிழக அரசு இந்த சுவர்களைக் கட்டியது.
ஆம்புலன்ஸ் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பால் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாததால் அவை கட்டப்பட்ட ஒரே நாளில் இடித்துத் தள்ளப்பட்டன என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏ சண்முக சுந்தரம் கூறினார்.
இந்தச் சுவர்கள் பொன்னையில் உள்ள மாதண்டகுப்பம் மற்றும் குடியாத்தம் அருகே சைனகுண்டா ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு அருகே எல்லைச் சாலைகள் வழியாக கட்டப்பட்டன.
“பால் உட்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சோதனைச் சாவடிகள் வழியாக செல்ல முடியாததால், வேலூர் மாவட்ட நிர்வாகத்திடம் சுவர்களை அகற்றுமாறு கோரப்பட்டது” என்று சித்தூர் ஆர்.டி.ஓ சி ரேணுகா தினசரிக்கு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த எல்லை தாண்டிய வாகன இயக்கத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே எல்லைகளைத் தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 1,885 பாதிப்புகளும், 24 உயிரிழப்பும் பதிவாகியுள்ளன, ஆந்திராவில் 1,177 பாதிப்பு மற்றும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியரின் சுவர் கட்டும் நடவடிக்கை முதல் நாளே விமர்சனத்துக்கு உள்ளானது. கம்பு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப் பட்டு, தேவைப்படும் நேரத்தில் திறந்து கொள்ள வழி செய்யலாம் அல்லது பேரிகாட் வைத்து மூடலாம் என்ற வழக்கமான நடைமுறையை மீறி சுவர் எழுப்பி இப்போது அதை இடித்து, மேலும் வீண் வெட்டிச் செலவுகளுக்கு வழிவகுத்துள்ளார் ஆட்சியர் என்று விமர்சிக்கின்றனர் பலர்.
Kottina than thell illena pillaipoochi