காங்கிரஸ் எம்.பி.,யும் முன்னாள் தலைவருமான ராகுல் தனது மேற்கு வங்க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களை ரத்து செய்தார். இதனால் பாஜக.,வினர் கவலை அடைந்துள்ளனர். மேலும், பிரதமர் மோடியும் இது போல் பிரசாரக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று, ராகுலை மேற்கோள் காட்டி டிவிட்டர் பதிவுகளில் பலர் பதிலளித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தமது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளதாக டிவிட்டர் பதிவில் அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் திட்டமிடப்பட்ட 8 கட்ட தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. அங்கு, தேர்தல் பிரசாரத்தை 72 மணி நேரத்திற்கு முன்னதாக முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழலில், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் – பேரணிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக தமது டுவிட்டர் பதிவு மூலம் ராகுல் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலையில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் கால் நூற்றாண்டுக்கு முன் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுக்கு இடையிலான போட்டி என்பது, கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸுக்கு இடையிலான போட்டியாக மாறியது. பின்னாளில், பாஜக.,வின் வளர்ச்சி, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸின் பழைய பிரமுகர்களை ஓரங்கட்டி, பலரை பாஜக., நோக்கி திருப்பி விட்டது. இது தற்போது மம்தா மற்றும் பாஜக.,வுக்கு இடையிலான பிரதான போட்டியாக மாறியுள்ள நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் மேற்கு வங்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் நோக்கில், கொரோனா பரவலைக் காரணம் காட்டி, மம்தா பானர்ஜி தனது ஆதரவு அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறார். இருப்பினும், இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில், பாஜக.,வின் கை ஓங்கியிருப்பதால், மம்தா பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், எந்த வகையிலும் பலன் தராத மேற்கு வங்க தேர்தலில் தாம் பிரசாரத்தை ரத்து செய்திருப்பதாக ராகுல் அறிவித்திருப்பது, பாஜக.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், பாஜக.,வின் வளர்ச்சிக்கு ராகுலின் பிரசாரமும் ஒரு காரணம் என அக்கட்சியினர் நம்புவதுதான்!