நிறுத்திவிட்டு போன உங்களின் கார் திடீரென மாயமானால் எப்படி இருக்கும், அப்படித்தான், மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட கார் அப்படியே பள்ளத்திற்குள் மூழ்கியதை பார்த்து பதறிப் போயுள்ளனர் மும்பை மக்கள். இந்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாக்காக உள்ளது.
மும்பை காட்கோபர் பகுதியில் ராம்நிவாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த கட்டிடத்தின் வாகன நிறுத்த பார்க்கிங் பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் நேற்று காலை 9 மணியளவில் திடீரென பள்ளம் உருவாகியுள்ளது.
அந்த பள்ளத்தில் திடீரென விழுந்த கார், அதில் நிரம்பி இருந்த தண்ணீரில் மூழ்கி மாயமானது. நின்று கொண்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆரம்பத்தில் சாலையில் பள்ளம் உருவாகி கார் மாயமாகிவிட்டதாக நினைத்து அந்த பகுதிக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சென்ற பிறகு தான் குடியிருப்பு கட்டிடத்தில் உருவான பள்ளத்தில் கார் மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டிட குடியிருப்பு பகுதியில் உள்ள கிணறின் ஒரு பகுதி கான்கிரீட்டால் மூடப்பட்டு உள்ளது. அதன் மீது கார் நிறுத்தப்பட்டிருந்தது. மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால், காரின் சுமை தாங்காமல் கான்கிரீட் தளம் உடைந்துதான் இப்படி பள்ளம் ஏற்பட்டு கார் மூழ்கியிருக்கிறது.அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லை.
அந்த கார் பங்கஜ் மேத்தா என்பவருக்கு சொந்தமானதாகும். அவர் ஐயோ இங்கே விட்டிருந்த காரை காணோம் என பதறி துடித்தது பார்ப்போரை கலங்க வைப்பதாக இருந்தது. இதனிடையே, குடியிருப்பு சங்கம் கிரேன் மூலம் காரை மீட்டு வெளியே கொண்டு வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
😢😢😢😢
— Rupin Sharma IPS (@rupin1992) June 13, 2021
RCC slab over an unused #well sinks due to heavy rains in #Ghatkopar #society_parking#MumbaiRains pic.twitter.com/7SycA2grsr