கடந்த 6 ஆண்டுகளாக ஜூன் மாதம் 21 -ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் முக்கிய கருப்பொருள் ஆரோக்கியத்திற்கான யோகா.
இந்தியா முழுவதும் பல்வேறு யோகா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக யோகா தினம் பெருமளவில் மக்கள் கூடும் கூட்டமாக நடைபெறவில்லை.
யோகா தினம்
தலைநகர் தில்லியில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, யோகா தின சிறப்புரை ஆற்றினார்.
பிரதமர் மோடி, “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை” என்றவர்,
`நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து, “உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, இந்தியா மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது எம்-யோகா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் கொண்டிருக்கும். இது நமது ‘ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்’ என்ற குறிக்கோளில் நமக்கு உதவும்.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் யோகாவை கவசமாக பயன்படுத்தினர். மருத்துவர்கள், செவிலியர்கள் யோகா கற்பிக்கும் மருத்துவமனைகளின் படங்கள் உள்ளன. அனுலோம், விலோம், பிரயாமா போன்ற சுவாச பயிற்சிகளை செய்கிறார்கள்.
இந்த பயிற்சிகள் சுவாச அமைப்பை பலப்படுத்துகின்றன என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று மருத்துவ விஞ்ஞானம் கூட மருத்துவ சிகிச்சையைத் தவிர்த்து, குணப்படுத்தும் செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. குணப்படுத்தும் செயல்முறைக்கு யோகா உதவுகிறது” என்றார் பிரதமர் மோடி.
நாடு முழுவதும் இன்று யோகா தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வீட்டிலே யோகாசனங்கள் செய்து யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
Addressing the #YogaDay programme. https://t.co/tHrldDlX5c
— Narendra Modi (@narendramodi) June 21, 2021