புது தில்லி:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவத்துடன் தங்களது அமைப்பை ஒப்பிட்டு பேசியதாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்து, மோகன் பாகவத்திற்கு தனது கடுமையான கண்டங்களைத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களும் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் முஜாஃபர்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய மோகன் பாகவத், “ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களான நாம் ஒரு ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது. நாட்டிற்கு தேவை ஏற்பட்டால், நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களும் கேட்டுக்கொண்டால், வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு அல்லது ஏழு மாத காலம் பிடிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நாம் மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும். இது நமது திறமை” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் குறித்து பெருமிதமாகக் கூறினார்.
மோகன் பாகவத்தின் கருத்துக்கு விமர்சனங்கள் வலுவடைந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அது குறித்து விளக்கம் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
“மோகன் பாகவத்தின் பேச்சு மக்களிடம் தவறாகக் கொண்டு செல்லப்படுகிறது. அவர் ராணுவத்துடன் எங்கள் அமைப்பை ஒப்பிட்டு பேசவில்லை. பொது சமூகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுடன் ஒப்பீடு செய்தார். இரு தரப்பும் சேர்ந்து ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசினார்.” என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் டாக்டர் மன்மோஹன் வைத்யா விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.