கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் மற்றும் மஜத., இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில், துணை முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார், தமது ஓயாத ஒழியாத அரும் பணிக்காக மேலிடம் தனக்கு நியாயமான பதவியை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் மாநில புதிய முதலமைச்சராக வரும் புதன்கிழமை குமாரசாமி பதவியேற்கவுள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்காக பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குமாரசாமியுடன் துணை முதல்வராக பரமேஸ்வரா பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் அமைச்சரவையில், மஜத., காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து இடம் பெறுவர் என்றும், முக்கியத் துறைகளை காங்கிரஸ் பெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவல்களை மறுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார், வரும் புதன்கிழமை குமாரசாமி மட்டுமே முதல்வர் பதவியை ஏற்க உள்ளதாகக் கூறினார்.
மேலும், பதவி ஏற்ற ஒரு நாளில் தாம் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளதாக குமாரசாமி கூறியிருக்கிறார் என்றும், எனவே, அவர் வியாழக்கிழமையே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றும், அதன்பின்னரே அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் டிகே.சிவகுமாரிடம் கேள்விகளைக் கேட்டனர். அப்போது அவர் இவ்வாறு கூறினார். மேலும், துணை முதலமைச்சராக நீங்கள் பதவி ஏற்பீர்கள் என்று கூறப்படுகிறதே, அதுகுறித்து நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கர்நாடக அரசியலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய நான் செய்த பணிக்காக, மேலிடம் நியாயமான முடிவை எடுத்து, எனக்கு நீதி வழங்கும் என நான் நம்புகிறேன் என்றார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் பாணியில் கட்டுக்கோப்பாகப் பாதுகாத்து வைத்திருந்து, எடியூரப்பா தரப்பு அணுகவிடாமல் செய்தவர் டி.கே.சிவக்குமார் என்றும், அவரது விசுவாசத்துக்கு பரிசாக, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பரமேஸ்வராவும் துணை முதல்வர் பதவிக்கு அடிபோடுவதால், கர்நாடகாவில் விநோதமாக இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவி ஏற்கக் கூடும் என்று ஒரு செய்தி உலா வந்தது. இந்த நிலையில், துணை முதலமைச்சர் பதவி தமக்கே வழங்கப் பட வேண்டும் என்பதை மறைமுகமாக செய்தியாளர்கள் மூலம் மேலிடத்துக்கு வலியுறுத்தி டிகேஎஸ் ஒரு தகவலைப் பதிய வைத்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ்., இரு கட்சிகளிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றும் அவை குறித்து பேசித் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
#Karnataka #Congress #BJP #JDS


