
மலப்புரம்: சபரிமலைக்காக சரண கோஷம் முழங்கிக் கொண்டு வீதியில் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இருமுடி கட்டி, சபரிமலைக்கு ஐயப்ப சுவாமியின் தரிசனத்துக்காகச் செல்ல முயன்ற சசிகலா டீச்சர் போலீஸாரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப் பட்டார். அவர் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதில் இருந்து தடுக்கப் பட்டு, போலீஸாரால் கைது செய்யப் பட்டார். இந்நிலையில் கேரளம் முழுதும் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.
அது போல், மலப்புரம் கொட்டப்படி பகுதியிலும் போராட்டத்தை நடத்தினர் ஐயப்ப பக்தர்கள். ஐயப்பனின் சரண கோஷம் முழங்க பக்தர்கள் பேரணியாகச் சென்ற போது, பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த சிலர் கையில் கூர்மையான ஆயுதங்களுடன் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். பேரணியாகச் சென்றவர்கள் வைத்திருந்த செல்போன்களைப் பறித்துக் கொண்டு, மலப்புரத்தில் இது போன்று எதுவும் நடக்கக் கூடாது என்று மிரட்டினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

