காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370வது பிரிவு விலக்கிக் கொள்ளப் படும் மசோதா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கான மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்ததை அடுத்து, அது அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதா (உபா சட்டத்திருத்த மசோதா) ஆகியவற்றுக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.