
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் தஞ்சை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழன் மாலை உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிச்சாமி தற்போது டவுன் பஞ்சாயத்து இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில தலைமை தேர்தல் ஆணையச் செயலாளரை தமிழக அரசு மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் “விசுவாசமாகப்” பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா? இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் திரு.பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது! உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்? – என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்.