நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, தாமிரபரணி நதிக்கரை படித்துறைகளில் முன்னோர் திதி தர்ப்பணம் செய்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது .
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் 144 சிஆர்பிசி இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருவதாலும், ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் நலன் கருதி 20.7.2020 ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரையோர இடங்களில் ஒன்று கூடுவதையும் ஆற்றில் நீராடுவதையும் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அறிக்கையில் செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு திதி வழங்கும் நிகழ்ச்சிகளை, தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக தவிர்க்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். ஒத்துழைப்பு அளிக்க மாநகர காவல்துறை சார்பில் கோருகிறேன்… @Collectortnv என்று நெல்லை மாநகர துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.