சென்னை: முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்லவம் 2015 – 2016ம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கை உரையை தொடங்கினார். எதிர்க்கட்சிகள் அமளி: திமுக உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லாம் அம்மா மயம்! தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரையாற்றியபோது, முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை ஒவ்வொரு திட்டங்களின் போதும் பாராட்டிப் பேசினார். அம்மா அவர்களின் அரசு என்ற வார்த்தை அதில் கட்டாயம் இடம்பெற்றது. அவ்வாறு அவர் பாராட்டிப் பேசிய போது எட்டாம் அதிசயம்… ஒன்பதாம் வள்ளல் எங்கள் அம்மா என்றார். கடந்து வந்த பாதை: 2015 -16 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். இது நடப்பு அதிமுக அரசில் நிதியமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ள 5வது பட்ஜெட்டாகும். அதேசமயம், 2வது முறையாக முதல்வராகியுள்ள அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட். ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு, கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011 – 12ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012- 13, 2013- 14 ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. 2014- 15ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 4 பட்ஜெட்டுகளையும் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர் நிதியமைச்சர் மற்றும் முதல்வர் பொறுப்பில் இருந்து தாக்கல் செய்தார். முதல்வர் ஒருவர் தமிழகத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். 2000- 2001ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பட்ஜெட் தாக்கல்: வழக்கம் போல் அம்மா புகழ்; திமுக வெளிநடப்பு!
Popular Categories


