காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி, வில்வம், விபூதி, மஞ்சள் தூள், அருகம்புல் உள்ளிட்ட6 பொருட்கள் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில் ஏதேனும் ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜைசெய்து வழிபடுவது வழக்கம்.
பின்னர் அந்த பொருளை கோயில் மூலவர்அறைக்கு முன்பாக கல்தூணில் உள்ள கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள். இதனை தரிசித்து வழிபட, பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள்.
மேலும், கண்ணாடிபேழைக்குள் என்ன பொருள் வைக்க வேண்டும் என்பதை பக்தரின் கனவில் ஆண்டவன் தெரிவிப்பதாக நம்பப்படுகிறது. இது ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ என்று அழைக்கப்படுகிறது.
கண்ணாடி பேழைக்குள்வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் எதுவும் கிடையாது. வேறொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும்.
கடந்த 23-ம் தேதி குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த நாகேஸ்வரி (31) என்ற பெண் பக்தரின் கனவில் வந்ததாகக்கூறி, வேப்பிலை, துளசி,வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள்தூள் ஆகிய 6 பொருட்கள் வைக்கப்பட்டு நேற்று பூஜை செய்யப்பட்டது.
பக்தர்கள் கூறும்போது, “6 பொருட்களும் மருத்துவ குணம் நிறைந்தவை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆண்டவன்உத்தரவு பெட்டியில் மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் வைக்கப்படுவதால், கொரோனா தொற்று குறையும் என்று நம்புகிறோம்” என்றனர்.