கணவனின் கள்ளத்தொடர்பை அறிந்த மனைவி மன உளைச்சலில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் தண்டபாணி(வயது 40). இவர் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் லட்சுமி (வயது 20) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 3 மாதங்கள் கழித்து தண்டபாணி குடித்துவிட்டு லட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றுபாதை தெருவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தனது கணவர் தண்டபாணி கள்ள தொடர்பு வைத்திருந்ததை அறிந்த லட்சுமி மன உளைச்சலில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு லட்சுமி தீ வைத்துக்கொண்டார். தீ உடல்முழுக்க பரவியதால் அலறித்துடித்த லட்சுமி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் உயிரிழந்த லட்சுமியின் தாயார் உண்ணாமலை தந்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திருமால் அவர்கள் வழக்கு பதிவு செய்து, சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்