வலிப்பு நோயால் மூதாட்டி இறந்ததாக கருதப்பட்ட நிலையில், 5 பவுன் நகைக்காக வீட்டு வேலைக்கார பெண் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி (65). இவரது கணவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவரது மகன் ரயில்வே துறையில் டிடிஆர் ஆக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, கடந்த 15ஆம் தேதி பணிக்காக ஜாக்குலின் மகன் மதுரை சென்று விடவே, வீட்டில் வேலைக்கார பெண்ணுடன் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிராங்கிளின் தனது தாய் ஜாக்குலின் மேரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்கவில்லை.
இதனை அடுத்து தனது வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மா போனை எடுக்கவில்லை என்னவென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு ஜாக்குலின் மேரி நாற்காலியில் இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரது மகன் மதுரையில் இருந்து தஞ்சை வந்து உள்ளார்.
இந்நிலையில் தனது தாய்க்கு காக்கா வலிப்பு நோய் இருப்பதாகவும் அதனால் உயிர் இழந்திருக்ககூடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் மர்ம மரணம் என காவல்துறை வழக்கை முடித்து விட்டனர்.
இதனிடையே, வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது மகன் தனது தாய் அணிந்திருந்த செயின், வளையல் ஆகியவற்றை காணவில்லை, எனவே தனது தாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில், ஜாக்லின் கொலை செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவ அறிக்கை வரவே காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது விசாரணையில் வீட்டில் வேலை செய்த ஆரோக்கிய டென்சி, முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினர் பாணியில் அவரை விசாரணை செய்ததில், ஜாக்லினை ஐந்தரை பவுன் நகைக்காக கொலை செய்ததாகவும், அவரது தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் மர்ம மரணம் என்ற வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து, ஆரோக்கிய டென்சியை கைது செய்தனர்.
மேலும் ஜாக்லின் இறுதி சடங்கில் எதுவும் தெரியாதது போல் கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.