பிறந்த நாள் பரிசு’ என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொரியர் பார்சலில்போதை மாத்திரைகள் வரவழைத்த ஓவியக் கலைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை பழைய விமான நிலையத்திற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த கொரியா் பாராசல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது புதுச்சேரி மாநிலம் ஆரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. உள்ளே பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக பார்சலின் மேல் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பார்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பார்சலில் 994 போதை மாத்திரைகளும், 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சமாகும். இதனை தொடர்ந்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து அந்த பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த ஆரோவில் நகரில் உள்ள முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு அந்த முகவரியில் திருநெல்வேலியை சோந்த ரூபக் மணிகண்டன்(29), லாய் விகூஸ்(28) ஆகிய 2 பேர் இருந்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர்.
அங்கு இரு பார்சல்களில் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர்கள் இருவரும் இயற்கை ஓவிய கலைஞா்கள் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் இதேபோல் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள்,போதை ஸ்டாம்புகள் வரவழைத்து கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்தும் கஞ்சா போதைப்பொருளையும் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் சுங்கத்துறை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், கஞ்சா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் சென்னை ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.