
சைக்கிளில் தேச பக்தி பாதயாத்திரை செல்லும் காந்தியவாதி கருப்பையாவுக்கு கரூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் காந்தியவாதியான கருப்பையா. இவர். அறிவியல், உலக சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம், வளர்ச்சி குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க தேசபக்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆலந்தூரில், ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து, சைக்கிளில் இந்தப் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.
நேற்று கரூர் மாவட்டம் வந்த அவர், ஜெகதாபி என்ற கிராமத்தில் இரவு தங்கி விட்டு, காலையில் பாதயாத்திரையைத் தொடங்கினார். மதியம் தான்தோன்றிமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்தார். அவருக்கு கரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
கருப்பையாவை வரவேற்று, அவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளுடன் பாதயாத்திரை செல்லும் அவர், அடுத்த மாதம் 15 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் பாதயாத்திரையை முடிக்கிறார்.
கரூரில் இருந்து புறப்படும் அவர் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், பெங்களூர் வழியாக இஸ்ரோ வளாகத்தைச் சென்றடைகிறார். தான் செல்லும் வழிகளில் இந்தப் பாதயாத்திரை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், விழிப்புணர்வு கருத்துக்களை ஒலிப்பெருக்கியில் எடுத்துரைத்தும் செல்கிறார்.
வீடியோ செய்தி: