‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

Published:

annamalai speech in madurandhagam - 2026

கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் பக்தர்களின் வசதிக்காக மின் தூக்கி அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் திறப்பு விழாவில் அது வேலை செய்யாமல் போகவே, மின் தூக்கி ஆபரேட்டரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதுகில் அடித்ததாகவும் செய்தி பரவியது. இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்தார் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் ….

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ₹3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது.

சுமார் 60 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு, தலா 20 பேர் பயணம் செய்யும் இரண்டு மின்தூக்கிகள் அமைக்க, உண்மையில் ₹3.55 கோடி செலவு ஆகுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த மின் தூக்கிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்க, அமைச்சர் திரு. சேகர்பாபு, அமைச்சர் திரு. கோவி. செழியன் ஆகியோர் முற்பட்ட நிலையில், மின்தூக்கிகள் வேலை செய்யவில்லை. மின்தூக்கி வேலை செய்யாததால், அதனை இயக்குபவரை, அமைச்சர் திரு. சேகர்பாபு, முதுகில் அறைந்திருக்கிறார். பக்தர்களின் காணிக்கை பணம் ₹3.55 கோடி செலவிட்டும், இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்தும், மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது?

வயதான பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின்தூக்கிகளில் கூட, கமிஷன் அடித்திருக்கிறார்களா? 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்று கூறியிருந்த நிலையில், 10 பேரைக் கூட தாங்கும் சக்தி, அந்த மின்தூக்கிகளுக்கு இல்லை என்றால், இந்த மின்தூக்கிகளின் தரம் குறித்த கேள்வி எழுகிறது.

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

இவற்றில் எந்த நம்பிக்கையில், வயதான பக்தர்கள் பயணம் செய்வார்கள்? உடனடியாக, இந்த இரண்டு மின்தூக்கிகளையும் முறையாக தரப் பரிசோதனை செய்து, அறிக்கை வெளியிட வேண்டும். உண்மையில் 20 பேர் எடையைத் தாங்கும் சக்தி இந்த ஒவ்வொரு மின்தூக்கிகளுக்கும் இருக்கிறதா என்பது பக்தர்களுக்குத் தெரிய வேண்டும்.

மேலும், இதற்காகச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ₹3.55 கோடிக்கான முழு கணக்குகளையும், இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிட்டு, சேகர் பாபு பதில் கொடுத்தார்.

இதனை பகிர்ந்த அண்ணாமலை, செல்லத்தட்டு சேகர்பாபு என்ற விதத்தில் கிண்டல் செய்து இன்று ஒரு பதிவினை வெளியிட்டார் அதில்,

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சுவாமிமலை திருக்கோவிலில், மின்தூக்கி அமைப்பதில் நடந்திருக்கும் ஊழல் குறித்து, அமைச்சர் திரு. சேகர்பாபு புதுவிதமான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுவாமிமலை திருக்கோவிலில் மின்தூக்கி அமைக்கிறோம் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த அமைச்சர் திரு. சேகர்பாபு, தற்போது பல்டி அடித்து, உபயதாரர்கள் நிதி என்று முதன்முறையாக கூறியிருக்கிறார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சட்டசபையில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த மின்தூக்கிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில், எப்படி இரண்டு ஆண்டு காலமானது என்ற கேள்வி ஒருபுறம். ஒரு மின்தூக்கி 20 பேர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், எப்போது அது 13 பேர் என்றானது?

அதுமட்டுமின்றி, நேற்றைய தினம், அதிக எடை என்ற காரணத்தால், மின்தூக்கி செயல்படாமல் நின்ற போது, அதில் 10 பேர் கூட இல்லையே? சரி. அமைச்சர் கூறியிருப்பதைப் போல, கடந்த இரண்டு ஆண்டுகளில், உபயதாரர்கள் வழங்கிய ₹2,000 கோடி நிதியில், திமுக அரசு செய்த 12,200 திருப்பணிகள் எவை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியில் செலவிட்ட திருப்பணிகள் எவை என்ற பட்டியல் வழங்கத் தயாரா?

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த திருப்பணிகள் அனைத்துமே உபயதாரர்கள் நிதியில்தான் நடந்தது என்றால், கோவில்களின் நிதி, சொத்துக்கள், உருக்கிய தங்கம் அனைத்தும் எங்கே சென்றது? இறுதியாக, மின்தூக்கி இயக்குபவரின் முதுகில் அறைந்ததை, தட்டிக் கொடுத்தேன் என்கிறார் அமைச்சர் திரு. சேகர்பாபு.

இப்படித்தான் ஒரு முறை, முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மெட்ரோ ரெயிலில் ஒரு இளைஞரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததாகக் கூறினார். அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கோரிக்கை மனு கொடுத்த ஒரு ஏழைத்தாயின் தலையில் அடித்தார்.

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்? – என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.

Related articles

Recent articles

spot_img