தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார்.
குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை திருச்சி செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
அதிகாலை 2 மணி அளவில் தஞ்சை- வல்லம் இடையே ஆலக்குடி பைபாஸ் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார்சைக்கிள் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் இருந்த இரும்புகம்பி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குலோத்துங்கன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது மறைவுக்கு கால்பந்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குலோத்துங்கனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னுடன் இணைந்து விளையாடிய சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


