தில்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர்.
இது குறித்து தில்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இன்று காலை தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு ஒரு விமானம் புறப்பட்டது. எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான அந்த விமானத்தில் பைலட் உட்பட 10 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார் செய்யுமாறும் கோரினார்.
அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளை செய்தோம். ஆனால் சில வினாடிகளிலேயே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், காலை 9.50 மணி அளவில் விமான நிலையத்துக்கு அருகேயே விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்திலிருந்த 10 பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன – என்று தெரிவித்தனர்.