ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறை ஆனதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
பொதுமக்கள் போராட்டம் தீவிரமான நிலையில் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் ஆலைக்கு சீல்.வைக்கப்பட்டது.
இதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த பசுமைத் தீர்ப்பாயம் 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி டிபேன் என்பவர் முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள் இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் பரிசீலிப்பதாகக் கூறினர்.