சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து பேசுவது கிடையாது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள், அரசு சார்பில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அமைச்சர், ஜெயக்குமார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது
திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்த அளவில், சிதம்பரம் கைதுக்குப் பிறகு அவரது குரல் ரொம்பவே மென்மையாகி விட்டது. ஏனெனில் அடுத்தது நீங்கள்தான்.. என்ற ஒரு பயம் வந்துவிட்டது. எனவே நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள, பொது வினியோகத் துறை விவகாரத்தில் சாதாரணமாக ஒரு குரல் கொடுத்துள்ளார்
ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு, ஸ்டாலின் மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து உள்ளாரா என்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் அவர் அளித்த பேட்டியை எடுத்து திருப்பி போட்டு பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பொது வினியோகத் துறை தொடர்பாக லேசாக ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் பொது விநியோகத் துறை என்பது மிகவும் வலிமையாக உள்ளது. எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு குக்கிராமத்தில் கூட ரேஷன் கடைகள் நிறுவப்பட்டு, பொது மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என வநதாலும், தமிழக மக்கள் இப்போது என்னென்ன ரேஷன் பொருட்களை வாங்குகிறார்களோ அதே பொருட்கள் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். அதே நேரம் வெளிமாநிலத்தில் இருந்து இங்கே வந்து ரேஷன் பொருள் வாங்குவோருக்கு விலையில்லா அரிசி வழங்கப்படாது. சிறு அறிக்கை பொது விநியோகத் திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இது ஸ்டாலினுக்கும் தெரியும். இருப்பினும் மத்திய அரசுக்கு எதிராக, நானும் அறிக்கை விட்டேன் என்பதை காட்டிக்கொள்ள, ஒரு சிறு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இனிமேல் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக அவர் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்