பள்ளிக்கரணை அருகே வைக்கப்பட்ட பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதிலும் இருக்கும் பேனரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இனிமேல் அரசின் ஒப்புதல் இல்லாமல் பேனர்கள் வைப்பதற்குத் தடை விதித்தும் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களுக்காகப் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் கேட்டுக் கொண்டனர்.
அதே போல, திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அவ்வாறு வைக்கும் நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்ளாது புறக்கணிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ராதாபுரம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, கடந்த 1 ஆம் தேதி நடந்த அவரது இல்லத்திருமண விழாவிற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்றிருந்தார்.
ஸ்டாலினை வரவேற்க அப்பாவு திருமணம் நடந்த பணகுடி என்னும் பகுதியில் பேனர் வைத்திருந்தார். பேனருக்குத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் அத்து மீறி பேனர் வைத்ததால், திமுக உறுப்பினர் அப்பாவு மீது பணகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.