“2020ல் ரஜினி கட்சி தொடங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார்; 2021ல் ரஜினி முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.
எப்போ வருவாரோ… எந்தன் கலி தீர என்று தெய்வத்தைப் பார்த்து பாட்டு பாடியவர்கள் பலரின் துன்பங்களை தெய்வம் தீர்த்து வைத்துள்ளது. அது போல் தமிழக அரசியலில் எப்போ வருவாரோ என்று காத்துக் காத்து கண்கள் பூத்து நின்று கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்! ஆனாலும் ரஜினி இதோ இதோ என்று போக்குக்காட்டி, சினிமாவில் நடிப்பதிலேயே மீண்டும் மீண்டும் தன் ஆர்வத்தைக் காட்டிவருகிறார்.
இதனால் அவரை கிண்டல் செய்வதும் கேலி செய்வதும் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி, கடந்த கால் நூற்றாண்டு காலமாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், இதுவே என் கடைசித் தேர்தல்; இதிலாவது என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தேர்தல் தவறாமல் சொல்லி வந்தார்.
ரஜினியும் தனக்கு நெருக்கடி வந்து, கட்சி தொடங்க வேண்டிய சூழல் ஏற்படும் போதெல்லாம், கருணாநிதியைப் போய்ப் பார்த்து, அந்தப் பேச்சுக்கு ஒரு மங்களம் பாடி வைப்பார்!
கருணாநிதியின் வழியில், ஒவ்வொரு சினிமா வெளியில் வரும்போதும், அந்தப் படத்தின் சிறப்பு விளம்பர நிகழ்ச்சியில், இதுவே என் கடைசிப் படம் என்று சொல்லாமல் சொல்லி வைப்பார். ஆனால் அந்தப் படம் வெளிவந்து சூட்டோடு சூடு ஆறும் முன்னர், அடுத்த படம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு விடுவார்.
இந்த நிலையில், தற்போதைய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ், ஒரு நம்பிக்கையினைக் கொடுத்திருக்கிறார். அவர் கூறியது போல் அற்புதம், அதிசயம் நிகழும்… என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியுள்ளார்.
2020ல் ரஜினி கட்சி தொடங்குவார். தொடர்ந்து தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்வார். மக்களை சந்திப்பார். பின்னர் 2021ல் ரஜினி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவார். அவர் கூறியது போல் அற்புதம், அதிசயம் நிகழும் .. என்று கூறியுள்ளார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ்.