சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் இருந்தார். வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநாகராட்சியில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார். இதனால் வெங்கட்டம்மா மற்றும் ரஜிதா மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரஜித்தா வசிக்கும் அதே அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். இவரத மகன் சதீஷ்( வயது 31). இவர் ரஜிதாவை 7 வருடமாக காதலித்து வந்துள்ளார். ரஜிதாவும் காதலித்து வந்ததாக அப்பகுதியினர் சொல்கிறார்கள்.
இதற்கிடையே தந்தை இறந்து போனதால், ரஜிதாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்திருக்கிறது. தந்தை வேலை பார்த்த சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக ரஜிதா வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளார். அரசு வேலை கிடைத்த பின்னர் தனது காதலர் சதீஷை உதாசினப்படுத்தினாராம். அவரது போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் சதீஷ் கோபத்தில் இருந்துள்ளாராம்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 17ம் தேதி ரஜிதாவுக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த விஷயம் தெரிந்ததும் சதீஷ் கடும் வேதனை அடைந்தாராம். ஏன் இப்படி செய்கிறாய் என்று ரஜிதாவுடன் சதீஷ் சண்டை போட்டாராம். மயிலாப்பூரைச் சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என ரஜிதா கூறியதாக தெரிகிறது.
இதனால், காதலி மீது ஆத்திரத்தில் இருந்த சதீஷ் காதலியை கொன்று தானும் தற்கொலை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார். இதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் ரஜீதாவின் வீட்டின் மேல் இருந்த ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் குதித்துள்ளார். பின்னர், காதலி ரஜிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மாவுக்கும் தீ வைக்க வீடு மொத்தமும் தீ பற்றி எரிந்தது.
இந்த சம்பவத்தில் வெங்கடம்மா, ரஜிதா மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து உயிரிழந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் தீ விபத்து என்று கருதி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆர்.கே. நகர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வீட்டில் தாய் , மகள் மட்டுமே வசித்த நிலையில் மூன்றவதாக உடல் கருகி கிடந்தவர் யார் என்று விசாரித்த போதுதான், ரஜிதாவின் காதலன் சதீஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, ஆர்கே நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மற்றும் காதலியின் தாயாரை எரித்துக் கொன்று காதலுனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.