சென்னை அருகே, இரும்பு கம்பி தொழிற்சாலையில் ஒரே நேரத்தில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுக்க கொரோனா நோய் பரவல் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு என்பது சுமார் 1000 என்ற அளவில் நெருங்கிவிட்டது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் அது ஆயிரம் என்ற அளவை தாண்டி விட்டது.
இந்தியா முழுக்க இன்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரும்பு கம்பி தொழிற்சாலையில் 19 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ளது அந்த இரும்பு கம்பி தொழிற்சாலை. இங்கு கணிசமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிப்பு பரவியுள்ளது. அவர் மூலம், இதுவரை மொத்தம் 19 தொழிலாளர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் யார் யாரிடம் பழகினார்களோ அவர்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால் பல நிறுவனங்களிலும் நோய் பரவல் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாக லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள், அதிகாரிகள் பெறுவதற்கு தக்கபடி ஒத்துழைக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது
சென்னையில் இதுபோல கொரோனா கிளஸ்டர் உருவாக்குவது மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, வீட்டு வேலைக்கு செல்வோர், டிரைவர்கள் போன்ற நிறைய பேருடன் பழக வாய்ப்புள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளது.
ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணிகளை அதிகப்படுத்தினால்கூட ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போடுவதற்கு வராமல் மெத்தனமாக தவிர்ப்பதால், நோய்களை கட்டுபடுத்த முடியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
இதுவரை தமிழகத்தில் முதல் டோஸ் போட்டுக்கொண்டு இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து போடாதவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள்.