சென்னை:
அதிமுக.,வை கைப்பற்றுவேன், இரட்டை இலையை மீட்பேன் என்றெல்லாம் குறிக்கோள்களுடன் கிளம்பிய டிடிவி தினகரன், தற்போது அது இயலாத நிலையில், தன்னை நம்பி வந்தவர்களை தக்கவைக்கவும், அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், புதிய கட்சியை துவக்கவுள்ளார். ஏற்கெனவே ஆர்.கே.நகரில் குக்கர் விசில் அடித்து குதூகலப் படுத்தி விட்டதால், அதையே தேர்தல் ஆணையத்தில் கேட்டுப் பார்த்தார். தேர்தல் ஆணையம் கையை விரித்து விடும் என்று கருதி, தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி, குக்கரை தக்க வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் அவர் புதிய கட்சியைத் தொடங்கவும், தனது கட்சிக்கு கவர்ச்சிகரமான பெயர்களைச் சூட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு மூன்று பெயர்களை சமர்ப்பித்து கேட்டார். இரண்டு பெயர்களில் அதிமுக., என்று வருவது போல் அமைந்திருந்தது. அதற்கு பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அம்மா அண்ணா தி.மு.க., – எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., – எம்.ஜி.ஆர்., அம்மா தி.க., என மூன்று தினகரன் கேட்டிருந்த பெயர்களில் ஏதேனும் ஒன்றை தற்காலிகமாக பயன்படுத்த அனுமதிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு தில்லி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் தினகரன் துவங்கவுள்ள கட்சி குறித்தும், கட்சியின் பெயர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர் கூறிய பெயர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்துக் கூறியபோது, யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். அதில், எங்களுக்கு மாறுப்பட்ட கருத்து கிடையாது. தினகரன் கட்சி போனியாகாது. கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என அவர் தேடுகிறார். அவருக்கு வேண்டுமானால் ஒரு யோசனை சொல்கிறேன். ‘டோக்கன் முன்னேற்ற கழகம்’ அல்லது, ‘தில்லுமுல்லு தினகரன் முன்னேற்ற கழகம்’ என்ற இரண்டு பெயர்களில், ஒரு பெயரை தேர்வு செய்யலாம். பானை, சட்டி, தவா, கரண்டி போன்ற சின்னங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்” என்று கூறினார்.