சென்னை:
இப்போதெல்லாம் ‘அட்மின்’கள் படாத பாடு படுகிறார்கள். சமூக வலைத்தளங்களில், வி.ஐ.பி.,கள், சினிமா துறையினர், அரசியல்வாதிகள் இயங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களால் அதிக நேரத்தை செலவிட முடியாத போது, அட்மின் என யாரையாவது அமர்த்திக் கொள்கின்றனர். அட்மின்கள் சிலர் ஊதியத்துக்கு உழைக்கின்றனர்.
சில நேரங்களில் அவர்களின் கருத்துகள் சர்ச்சையாகும் போது, பழியை அட்மின்கள் மீது போட்டுவிட்டு, எங்களை அறியாமல் நடந்த தவறு. அந்தக் கருத்தை நீக்கிவிட்டேன், அட்மினையும் நீக்கிவிட்டேன் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இது முன்னர் ஸ்டாலினால் கையாளப் பட்டது. இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன போது, இது நான் சொல்லவில்லை, அட்மின் செய்தது என்று பழியைப் போட்டார். அவரது அடிச்சுவட்டில், பாஜக.,வின் ஹெச்.ராஜா, ஈ.வே.ரா. சிலை குறித்த கருத்து, தான் போடவில்லை, அட்மின் போட்டது என்று கூறி விலகப் பார்த்தார்.
இப்போது இந்த ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். லதிமுக., கட்சித் தலைவராக மீண்டும் களம் இறங்கியிருக்கும் டி.ஆர்., ‘பீப்’ பாடலை வெளியிட்டது அட்மின்தான் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமா துறையில் ஏதாவது கருத்தைக் கூறி சர்ச்சைகளில் சிக்குபவர் சிம்பு. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிப் பாடிய ‘பீப்’ பாடல் ஒன்று யு டியூபில் வலம் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்த அந்தப் பாடலை எதிர்த்து மாதர் சங்கங்கள் ஆர்பாட்டங்கள் நடத்தின.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தரிடம் பீப் பாடல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர், “பீப் பாடல் விவகாரம், சிம்பு மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட, அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென நடத்தப்பட்ட ஒரு போர். பொதுவாக இசையமைப்பாளர்கள் டம்மி வார்த்தைகளைப் போட்டுத்தான் பாடல்களை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி வைத்திருந்த ஒரு பாடலை ஒருவர் எடுத்துச் சென்று வெளியிட்டுவிட்டார். அந்தப் பாட்டை திருடி எடுத்துக் கொண்டு போய், திருட்டுத்தனமாகச் செய்து அவரை மாட்டி விட்டார்கள். இந்த உலகத்தில் வைட்டமின் ‘ப’வுக்காக எத்தனை பேர் இருப்பார்கள். பணம் பாதாளம் வரை பாயும். அப்படி ஒரு அட்மின் தான் அந்தப் பாடலை வெளியிட்டு விட்டார்” என்றார்.
பாவம் அட்மின். ஆனால், அந்த பீப் இடைவெளியில் இட்டு நிரப்ப அந்தச் சொல்தான் கிடைத்ததா? செய்தியாளர்கள் யாரும் கேட்கவில்லை!