நாகர்கோவில் : சமூக வலைதளங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று பகீர் புகார் தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அவரிடம் பேராசிரியை நிர்மலா விவகாரம், ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவர் மீது சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள்.
பேராசிரியை நிர்மலா தேவி பேச்சில் இருந்தே அவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் தவறான முறையில் பேசி வருவதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு ஆளுநரை குறை சொல்வது எந்த விதத்திலும் சரியானது அல்ல. தமிழகத்தில் அரசியல் கட்சியினரை தவறாக சித்திரிக்கும் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இணையதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதே காரணமாகும்.
காவிரி பிரச்னை 150 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதில், 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது நியாயமான செயலா? என்று கேள்வி எழுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்.