சென்னை: தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கஜா புயல், மரங்களையும் மின் கம்பங்களையுமே அதிகம் சாய்த்துள்ளது. மரங்கள் பல சாலைகளில் வேரோடு சாய்ந்துள்ளன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன.
மரங்கள் மின் கம்பிகளில் சரிந்து அவற்றின் பாரம் தாங்காமல் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்து பல இடங்களில் சேதமுற்றுள்ளன. இது எதிர்பாராத ஒன்று என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.
இந்நிலையில், தங்கள் பகுதிகளுக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை என்று புகார் கூறுகின்றனர் பொது மக்கள். ஆனால், மின் கம்பங்கள் அதிக அளவு சேதம் அடைந்துள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து மின் கம்பங்களை வாங்க வேண்டியுள்ளது என்று கூறுகிறது அரசுத் தரப்பு.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிகளில் 21,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மின் சீரமைப்பு பணிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து 1000 பணியாளர்கள் வந்துள்ளனர். ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த மின் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.