சென்னை: இன்று ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் விசாரணை இன்னும் இருப்பதால், அவரது பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பதவி நீட்டிப்புக் காலத்தில், ஊதியம் பெறாமலும் தாம் பணியாற்றாத் தயார் என்று கூறினார் பொன்.மாணிக்கவேல்.
முன்னதாக, சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் மற்றும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஓர் ஆண்டு காலத்திற்கு பணி நீடிப்பு வழங்கி தீர்ப்பளித்தது.
சிலைக் கடத்தல் தடுப்பு வழக்குகளை நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரித்து வந்த நிலையில், நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கிய வழக்குகளைத் தவிர, நிலுவையில் உள்ள மற்ற அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட்1ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப் பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, தங்களிடம் ஆள் பற்றாக்குறை இருப்பதால், சிலைக் கடத்தல் வழக்குகளை தங்களால் விசாரிக்க இயலவில்லை என்றும், தற்போது விசாரித்துவரும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சிபிஐ தெரிவித்தது..
இந்நிலையில், இன்று இறுதிக்கட்ட வாதங்கள் முடிந்து தீர்ப்பு அளிக்கப் பட்டது. அதில், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையில் அது பிறப்பிக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை! கொள்கை முடிவு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எனவே, சட்டவிதிகளுக்கு உட்பட்டு இல்லாததால், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையை சிபிஐ.,க்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் அரசாணை ரத்து செய்யப் படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், விசாரணை நீள்வதால், ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டு நீட்டிப்பதாகவும், அவருக்கு தற்போது தமிழ்நாடு அரசு அளித்த அனைத்து வசதிகளையும் தொடர்ந்து வழங்க வேண்டும்! அதற்கான உரிய உத்தரவை டிஜிபியும், தமிழ்நாடு அரசும் பிறப்பிக்க வேண்டும்; மத்திய அரசும், சிபிஐ.,யும் தெரிவித்துள்ளதுபோல் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பணிநீட்டிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் நிலை பற்றிய விவரங்கள், விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கைகளை, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், தமிழ்நாடு அரசுக்கு அளிக்கத் தேவையில்லை; சீலிடப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் மட்டும் தாக்கல் செய்தால் போதும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்தத் தீர்ப்புக்குப் பின் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், யாருக்கும் எள்ளளவும் சிறுமை ஏற்படுத்தாமல், எவ்வித காலமும் தாழ்த்தாமல், சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து முடிக்க உள்ளதாகவும், பதவி நீட்டிப்பு காலத்தில், ஊதியம் பெறாமல் கூட பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.