கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் சயனக் கோலத்திலும் தொடர்ந்து ஆக. 1ம் தேதி முதல் நின்ற நிலையிலும் தரிசனம் அளித்து வருகிறார். சயனக் கோலத்தில் பெருமாளை தரிசிக்க வந்தவர்களை விட நின்ற கோலத்தில் காட்சி தரும் வரதராசப் பெருமாளை தரிசிக்க ஒவ்வொரு நாளும் அன்பர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அருகில் உள்ள ஊர்களில் இருந்து மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள், முதல் நாள் நள்ளிரவே கோயில் பகுதியில் வரிசையில் நின்று விடுகின்றனர். அதிகாலை கோயில் திறந்ததும் அத்திவரதரை தரிசிக்க ஆவலுடன் முண்டியடித்துச் செல்கின்றனர்.
அத்திவரதர் வைபவத்துக்கு இவ்வளவு அதிக அளவில் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் திட்டமிடலும் இல்லாததால், மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் பிரச்னையை சந்தித்து வருகின்றன.
பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகிறார்கள். இதனால் காஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப் படுகிறது.
இதனிடையே காஞ்சிபுரம் நகரில் மட்டும் பள்ளிகள் கடந்த ஜூலை 1ஆம் முதல், ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அத்திவரதர் வைபவம் நிறைவுறப் போகும் நிலையில், இன்னும் 10 நாட்களே உள்ளதால், கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஆக.12 ஆம் தேதி பக்ரீத், ஆக.15 ஆம் தேதி சுதந்திர தினம், ஆக.17 சனிக்கிழமை, ஆக.18 ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவாரம் முழுதும் விடுமுறைதான் என்று ஆகியிருக்கிறது காஞ்சிபுரத்துக்கு! இதனால், காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு வரும் ஆக.10 சனிக்கிழமை தொடங்கி, மறு வாரம் ஞாயிறு (ஆக.18) வரை 9 நாள்களுக்கு தொடர் விடுமுறைதான்!
இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
அத்திவரதர் தொடர்பான புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார், ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பக்தர்கள் வரும் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.