சென்னை:
தமிழகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்படும், ஒரு லட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறினார்.
தமிழக பா.ஜ.க., தேர்தல் மேலாண்மைக் குழுக் கூட்டம் நேற்று காலை கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர்கள் முரளிதர் ராவ், எச்.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், முரளிதரராவ் செய்தியாளர்களிடம் பேசியபோது,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, தொகுதிக்கு ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எங்களது பிரசாரக் குழுவினர் மக்களை நேரடியாக சந்தித்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுப்பார்கள்.
பிரதமரின் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ‘சிசு’ திட்டத்தின் மூலமும், 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ‘கிஷோர்’ திட்டத்தின் மூலமும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ‘தருண்’ திட்டத்தின் மூலமும் கடன் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக வருகிற 25-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை மக்களிடம் இதனை பிரபலப்படுத்த உள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியே நீடிக்கிறது. பா.ம.க. முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதே தவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவிக்கவில்லை. தேர்தல் வரும்போது, இந்த நிலைப்பாடு மாறக்கூடும். விரைவில் எங்கள் கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளன. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று அணியாக அமையும். – என்று கூறினார்.


