அருப்புக்கோட்டை: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் நிர்மலா தேவி. இவர், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ஆடியோ பதிவு வாட்ஸ் அப் மூலம் வெளியாகி வைரலானது. இதை அடுத்து பேராசிரியையைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அந்தப் பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கேட்டுக் கொண்டதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி., தனபாலிடம், கல்லூரி முதல்வர் பாண்டியராஜன், மாதர் சங்கத்தினர் இணைந்து புகார் அளித்தனர். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறினார்.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். தன்னை போலீசார் கைது செய்ய வருவது தெரிந்ததும், பேராசிரியை நிர்மலா தேவி, வீட்டை உற்புறமாகப் பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்தார். பின்னர் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நிர்மலா தேவியை கைது செய்தனர். கல்லுாரி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே நிர்மலா தேவி மீதான புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்ப முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.